மலரட்டும் புத்தாண்டு – தமிழ் மண்னே!
மகுடம் சூட்டி உனைப் போற்ற
மலரட்டும் இந்தப் புத்தாண்டு.
ஊர்விட்டுப் போனாலும் எங்கள்
வேரெல்லாம் இன்னும் அங்கே தான் இருக்கிறது.
தமிழன் என்று பெயர்கொண்டழைக்க
மலர்கின்ற புத்தாண்டில்
எம் மண்படிந்த அதிகாரப் பேயிருள் விலகி
பொன்னொளி பட்டு சிலிர்க்கட்டும்.
யாரிவரோ என்றறிய முடியாமல்
போனவர் கனவெல்லாம் நிஜமாக,
முன்னாளில் ஏர்பிடித்து நாம் வாழ்ந்த பூமியெல்லாம்
மீண்டும் தளிர்பரப்பி தாணிய வயலாக
பிறக்கட்டும் ஒரு புத்தாண்டு.
எங்கள் கல்லூரிக் கூடிருக்கும் குஞ்சுகளே!
கூடிருந்து சிறகடித்துப் பறந்த சிட்டுக்களே!
எமக்காய் அழகிய அந்தக் கூடமைத்த ஆசிரிய முத்துக்களே!
பிறக்கின்ற புத்தாண்டில்
உங்கள் உழைப்பினில் புதிய சக்தி பாய
எந்தன் சிந்தை நெகிழ்ந்தொரு நித்திய வாழ்த்துகள்.
“வருங்காலம் நமதாகட்டும்”
தாவீது
30/12/2008
